Home Digitization மன்னார் தீவு வரைப்படம்

மன்னார் தீவு வரைப்படம்

by admin
0 comment

முனைவர்.க.சுபாஷிணி

இங்கு இணைக்கப்பட்டிருக்கும் தீவின் வரைபடம் இன்றைக்கு ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒன்று. இதனைத் தயாரித்தவர் பாதிரியார் பிலிப் பால்டெயூஸ் (Father Philip Baldaeus 1632-1672) என்ற பெயர் கொண்ட டச்சுக்காரர். இவர் சிலோன் டச்சு அரசில் சமயத்துறை அமைச்சராகவும் பதவி ஏற்றிருந்தவர். இவர் ஒரு கத்தோலிக்க கிருத்துவ சமயப் பள்ளியை யாழ்ப்பாணத்தில் நிறுவி நடத்தி வந்தார். கி.பி.17ம் நூற்றாண்டில் இலங்கைத் தீவை கைப்பற்றி வணிக ஆளுமையை நிலை நாட்ட பெரும் முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்ட டச்சு அரச படையுடன் இவரும் அங்குப் பயணித்து பின்னர் யாழ்ப்பாணப் பகுதியில் தங்கியதாகக் குறிப்புக்கள் சொல்கின்றன. அவர் அன்றைய சிலோனில் தாம் பார்த்த, கேள்விப்பட்ட செய்திகளையும், பழகிய உள்ளூர் மக்களைப் பற்றியும், நடந்த நிகழ்வுகளையும் குறிப்பிட்டு தன் அனுபவங்களை ஆவணப்படுத்தியுள்ளார்.

மன்னார் தீவின் இன்றைய நிலவரைப்படத்தை ஏறக்குறைய ஒத்த வகையில் இந்த வரைபடம் அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றே. இன்றைக்கு நமக்குக் கிடைக்கும் நில அளவைக் கருவிகள் இல்லாத போதிலும் அன்றைய வரைபட தயாரிப்பு கருதுகோள் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றி இந்த வரைபடம் வரையப்பட்டிருப்பதைக் காண்கின்றோம்.

தீவுக்குள் அன்றைய காலகட்டத்தில் இருந்த சில கட்டுமானங்களையும் இந்த வரைபடம் காட்டுகிறது. அதில் டச்சு கோட்டையும் சில தேவாலயங்களும் இருப்பதைக் காணலாம். டச்சுக் காரர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே போர்த்துக்கீசியர் இலங்கைத் தீவின் பல பகுதிகளில் வணிகத்திற்காக வந்து பின்னர் தங்கள் ஆளுமையை விரிவாக்கியிருந்தனர் என்பதையும் காணும் போது இந்தத் தேவாலயங்கள் அனேகமாகப் போர்த்துக்கீசியர் காலத்திலும் சில டச்சுக்காரர்கள் ஆட்சிக்காலத்திலும் உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஊகிக்கலாம்.

மன்னார் தீவு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்திருக்கின்றது. மன்னாருக்கும் இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இடையில் உள்ள தூரம் ஏறக்குறைய 57கி.மீ. இந்தக் கடல் பாதையில் மேலும் சில சிறிய தீவுகளும் உள்ளன.

மன்னார் தீவில் உள்ள கோட்டை போர்த்துக்கீசியர்களால் கி.பி.1560ல் கட்டப்பட்டது. இக்கோட்டை பின்னர் டச்சுக்காரர்கள் ஆட்சியில் அவர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்த அரச கோட்டையாகச் செயல்பட்டது. 1696ம் ஆண்டில் டச்சுக்காரர்கள் இக்கோட்டையைச் சீரமைத்துக்கட்டினர். டச்சுக்காரர்கள் சரணடைந்த பின்னர் பிரித்தானியர் காலத்திலும் இக்கோட்டை முக்கிய அரச அலுவல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இன்று இக்கோட்டை இலங்கை ரயில் போக்குவரத்துத்துறையின் கீழ் அலுவலகமாக அமைந்துள்ளது.

பாதிரியார் பிலிப் பால்டெயூஸ் தாம் எழுதிவைத்த குறிப்புக்களைத் தொகுத்து உருவாக்கிய நூல் Description of the East India, Malabar and Coromandel coasts என்பதாகும். இது நெதர்லாந்தின் இன்றைய தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் டச்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு 1671ம் ஆண்டு அச்சு நூலாக வெளியிடப்பட்டது. ஏறக்குறைய 450 பக்கங்கள் கொண்ட நூல் இது. இந்த நூலில் மொழிபெயர்ப்புடன் பாதிரியார் பிலிப் பால்டெயூஸ் ஓவியமாகத் தீட்டி வைத்த வரைபடங்களும் அன்றாட வாழ்க்கை காட்சிகளும், மன்னார் தீவின் சில தேவாலயங்களின் ஓவியங்களும் இடம்பெறுகின்றன. இவை அக்கால காட்சியை இன்று நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டும் முதன்மைத் தரவுகளாகவும் அமைகின்றன.

You may also like

Leave a Comment